head


மே 12: உலக செவிலியர் தினம் அவர்களின் உன்னத பணிக்கு தலைசாய்ப்போம்!

|Tue 12th May 2020 08:00 AM|General| Page Views: 34

உலகெங்கும் இன்று அல்லலுறும் கொரோனா நோயாளிகளை தம் உயிர்களை துச்சம் என மதித்து பணிபுரியும் உலகெங்கும் வாழும் அனைத்து செவிலியர்களுக்கும் இன்றைய தினத்தில் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்க வேண்டிய கடமை நம் அனைவர்க்கும் உண்டு.

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள் என்பது கண்கூடு. 1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.

பொதுமக்களுக்கு செவிலியர்கள் (தாதியர்) ஆற்றி வரும் உன்னதத் தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூர முடிவு செய்யப்பட்டது. அவரது பிறந்த நாளை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.

இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

கை விளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல்! நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல். தாதியர் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். தாதியர் பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். கை விளக்கேந்திய காரிகை என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஓர் எழுத்தாளர் ஆவார்.

பிரிட்டனில் செல்வச்செழிப்பு மிக்க உயர் குடிக் குடும்பத்தை சேர்ந்த நைட்டிங்கேல், இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத் தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். கிறிஸ்தவரான இவர் தனக்கு இறைவனால் அருளப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்தார்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி நோயாளிகளைப் பராமரிக்கும் கல்வி நெறியை மேற்கொண்டு, மூன்றாண்டுகளில் நோயாளிகளைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார். அந்தக் காலத்தில் செவிலியர் சேவை ஒரு கவுரவமான பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844, டிசம்பரில் லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார்.

1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 செவிலியருடன் ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். வசதிக் குறைவுகளுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். அன்பினாலும் சிகிச்சைகளாலும் புளோரன்ஸ் ராணுவப் படையினரைக் குணப்படுத்தினார்.

இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார். தங்களை காக்க விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை என ராணுவ வீரர்கள் புளோரன்ஸைக் கவுரவித்தனர். மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புகள் மருத்துவத் துறையில் செவிலியர் பணிக்கான நூலாக இருக்கின்றன.

போரிலிருந்து நாடு திரும்பிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக பிபிசியினால் இனங்காட்டப்பட்டார். நாடு திரும்பிய நைட்டிங்கேலை இங்கிலாந்து மக்கள் கவுரவப்படுத்த விரும்பினர். அவருக்குப் பொன்னும், பொருளும் வழங்கினர். தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் ஒரு நர்சிங் பள்ளியை நைட்டிங்கேல் தொடங்கினார். இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக, புளோரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம் என்கிற பெயரில் இயங்கி வருகிறது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.