போலி விமானிகள் குறித்த கவலை காரணமாக, சிறப்பு விமானங்களை இயக்க பாகிஸ்தான் சர்வதேச விமானநிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை ரத்து செய்வதாக அமெரிக்க போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த விமானிகளில் 3ல் ஒருவர், முறைகேடாக, போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் என்பதை பாக்., அரசு சமீபத்தில் கண்டறிந்தது. இதுவரை உரிமம் பெற்ற 860 விமானிகளில் 262 பேர் போலி என கண்டறியப்பட்டுள்ளதாக பாக்., விமானத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
போலி விமானிகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருந்தார். போலி விமானிகள் குறித்த தகவலை அடுத்து 6 மாதங்களுக்கு பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை விதிப்பதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது.
இதனை பெரும் பின்னடைவு எனவும், தற்போதைய சிறப்பு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடியாக விமானங்களை வழக்கமான அட்டவணைப்படி இயக்க திட்டமிட்டு இருப்பதாக பாக். விமானப்போக்குவரத்து துறை செய்திதொடர்பாளர் அப்துல்லா கான் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் சர்வதேச விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஜூலை 1 முதல் சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான தடை விதித்துள்ளதாக பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து கனடா உள்ளிட்ட நாடுகளும் பாக்., விமானங்களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் கடந்த மே மாதம் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 97 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.