அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தின் உதவி செயலர் டொனால்ட் லு ( Donald Lu) இன்று டிசம்பர் 3 முதல் டிசம்பர் 10 வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அவரது பயணம் பிராந்திய செழிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த தெற்காசியாவின் முக்கிய பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் புது டெல்லியில், இந்திய-பசுபிக் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அமெரிக்க-இந்தியா ஒத்துழைப்பு குறித்து உதவிச் செயலர் லூ பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இதன்பின்னர், அமெரிக்க-இலங்கை கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதற்காக, டிசம்பர் 5 ஆம் திகதியன்று, உதவிச் செயலாளர் லு, இலங்கையின் கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த பயணத்தில் (USAID ) நிறுவன துணை உதவி நிர்வாகி அஞ்சலி கவுர் மற்றும் அமெரிக்க திறைசேரியின்; பிரதி உதவிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் ஆகியோர், உதவிச் செயலர் லூவுடன் இணையவுள்ளனர்.
அவர்கள் இலங்கையின் புதிய நிர்வாகத்தின் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளனர்.
இதன்போது, புதிய அரசாங்கத்துடனான உறவுகளை ஆழப்படுத்தல்;, ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப உதவி, திறன் மேம்பாடு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் மூலம், இலங்கையின் ஆட்சி மற்றும் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து ஆராயப்படும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை பயணத்தை அடுத்து அமெரிக்க உதவிச்செயலர் காத்மண்டுவுக்கு செல்லவுள்ளார்.