இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்றைய தினம் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் குறித்த சத்தியபிரமாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.
ஓய்வு நிலை அதிபர் நாகலிங்கம் சோதிநாதன், மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கிருஸ்ணபிள்ளை சின்னராசா, முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோர் முன்னிலையில் தமது சத்தியபிரமாணத்தை செய்துகொண்டனர்.
இதன்போது கருத்துரைத்த சிறீதரன், "இலங்கை தமிழரசுக்கட்சி, கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையும் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச சபையும், மட்டக்களப்பு இரண்டு சபைகளுமாக மொத்தம் ஆறு பிரதேச சபைகளில் சுதந்திரமாக எந்தவித இடையூறுகளும் இன்றி ஆட்சி அமைக்கவுள்ளோம்.
அதேநேரம், கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு ஒரு ஆசனம் போதாது உள்ள நிலையில் அந்த ஒரு ஆசனம் அகில இலங்கை தமிழ்க்காங்கிரசிடம் உள்ளது.
அந்த ஆசனத்தை கொள்கை ரீதியாக ஆதரவு வழங்க இணங்கி இருக்கிறார். நெடுந்தீவிலும்இவ்வாறு இணங்கியுள்ளனர். ஊர்காவற்துறை பிரதேச சபையில் தமிழ்க்காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.