ண்ணியம் தேடி புனிதம் அடைய நினைப்பவர்கள், மண்ணில் மனிதனை நாடி கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டாலே போதும் புண்ணியம் கோடி கிடைக்கும். மனிதம் என்பது மனித நேயத்தை குறிக்கும் ஒரு வளமான சொல். மனிதநேயம் என்பது புனிதம் நிறைந்த செயல்.
அன்பு என்பது இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் அன்னியோன்யம், ஆறுதல், நேர்மறை உணர்வு, இரக்க சிந்தனை, கருணை உள்ளம், சமூக அக்கறை, என்றும் அன்புடன் நடந்து கொள்ளும் முறை. இவை மனிதம் என்றும், மனிதநேயம் என்றும் போற்றப்படுகிறது.
இவற்றிலுள்ள அம்சங்கள் சக மனிதர்களிடையே முழுமையாக பரிமாறப்பட்டால் மனித நேயம் என்றும் பசுமையாக இருக்கும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் மனிதநேயத்தில் விரிசல் ஏற்பட்டுவிடும். அனைத்து மதங்களும், கோட்பாடுகளும் மனிதநேய சிந்தனைகளை விதைத்து இருக்கின்றன. விதைகளும், வேர்களும் என்றும் மறைந்துதான் இருக்கும். அதன்மேல் வளரும் கிளைகளும், பூக்களும், கனி வகைகளும் காட்சி தரும். அனைத்து மதத்தவர்களும் கிளைகள், பூக்கள், கனி வகைகள் போன்று பார்ப்பவர்களுக்கு என்றும் பசுமை மாறாமல் கண்கவர் காட்சியையும், கண்குளிர்ச்சியையும் தருவது அவர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.
இஸ்லாத்தில் மனிதநேயம் என்பது உயர்வானது. மற்ற கோட்பாடுகளை விடவும் வித்தியாசமானது. ஒரு மனிதனை வாழவைப்பதும், அவனது வாழ்க்கைக்கு முடிந்தளவுக்கு உதவி புரிவதும், அவனுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து அவனை விடுவிப்பதும்தான் இஸ்லாமிய மனித நேய கோட்பாடுகளாகக் கருதப்படுகின்றன.
ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால், அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல் குர்ஆன் 5:32)
‘ஒரு பெண் போர்க்களம் ஒன்றில் கொல்லப்பட்டு கிடந்தாள். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்வதை தடை செய்தார்கள். (ஆதாரம்: புகாரி)
‘எவரொருவர் தமது சகோதரருக்கு ஏற்படும் உலக துன்பங்களிலிருந்து அவரை விடுவிக்கிறாரோ, அவரை இறைவன் அவருக்கு ஏற்படப்போகும் மறுஉலக துன்பங்களிலிருந்து விடுவிக்கின்றான். மேலும், தமது சகோதரருக்கு உதவிபுரியும் காலமெல்லாம், அவருக்கு இறைவன் உதவி புரிந்து கொண்டே இருப்பான் எனவும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அஹ்மது).
அதேநேரம், கருணையாளர்களின் மீது இறைவன் கருணை செலுத்துகின்றான். எனவே, நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானில் உள்ளவர்கள் உங்கள் மீது கருணை காட்டுவார்கள்’ எனவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி)
‘மக்கள் மீது கருணை காட்டாதவன் மீது, இறைவன் கருணை காட்டமாட்டான்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தமக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்து சத்திய பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். ஆன்மிகத்தை அழகாக எடுத்துக் கூறினார்கள். ஆனாலும், அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனினும் மதீனாவிற்குச் சென்று முதன்முதலாக மதத்தைப் பற்றி குறிப்பிடாமல் மனிதத்தைப் பற்றி, மனித நேய கோட்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார்கள். அதில் மகத்தான வெற்றியை அடைந்தார்கள்.