அரச சேவைக்கான வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

user 27-May-2025 இலங்கை 75 Views

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 21 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (2) அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 04 மாகாண சபைகள் மற்றும் 02 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

 

2. இலங்கையின் டிஜிட்டல் அபிவிருத்தியை துரிதப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவன ரீதியான கட்டமைப்பொன்றை நிறுவுதல்
2025.01.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தற்போது நடைமுறையிலுள்ள இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் முகவராண்மை நிறுவனம் (ICTA) இரத்துச் செய்து டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவுவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் அபிவிருத்தியை துரிதப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவன ரீதியான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்காக, இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தற்போது காணப்படுகின்ற டிஜிட்டல் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துகின்ற அனுபவங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய டிஜிட்டல் மூலோபாயங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைவதற்காக நிரந்தமாகவும் சிறப்பாகவும் வரையறைக்கப்பட்ட நிறுவன ரீதியான கட்டமைப்பொன்று இருக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்காலத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள டிஜிட்டல் நிலையுருமாற்றக் கருத்திட்டங்களை தடைகளின்றி அமுல்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் தேவையான அதிகாரங்களுடன் சுயாதீன நிறுவனமாக “GovTech (Pvt) Limited” பெயரிலான அரசுக்குச் சொந்தமான கம்பனியொன்றை நிறுவுவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

3. கென்வில் ஹோல்டிங்ஸ் (தனியார்) கம்பனியின் பங்குரிமைகளை விடுவித்தல்
2011 ஆம் ஆண்டுடிசம்பர் மாதத்தில் சுற்றுலா/உபசரிப்பு துறையில் முதலீடு செய்வதற்காக கென்வில் ஹோல்டிங்ஸ் (தனியார்) கம்பனி நிறுவப்பட்டுள்ளது. குறித்த கம்பனியின் முதலீடாக அமைந்துள்ள “கிறான்ட் ஹயிட், கொழும்பு” கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சினோலங்கா ஹொட்டல் அன்ட் ஸ்பா (தனியார்) கம்பனி தாபிக்கப்பட்டுள்ளது. “அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம்” கீழ் கென்வில் ஹோல்டிங்ஸ் (தனியார்) கம்பனியின் பங்குரிமைகளை விடுவிப்பதற்காகவும், குறித்த பணிகளுக்கான பரிவர்த்தனை ஆலோசகராக இந்தியாவின் டெலொயிட் டச் ஹமத்சு எல்எல்பீ கம்பனியைத் தெரிவு செய்வதற்காகவும், அப்போதைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனாலும், அதற்கமைய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. “கிறான்ட் ஹயிட், கொழும்பு” கருத்திட்டத்தின் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (கிட்டத்தட்ட ரூ. 36 பில்லியன்) தேவையென தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்காக மேலதிகமாக தேவையான நிதி குறித்த கம்பனியின் பங்குதாரர்கள் அல்லது கடன் நிதியிடல் மூலமாகவோ பெற்றுக்கொள்வதற்குள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கம்பனியின் பங்குகளை விற்பனை செய்யும் செயன்முறை மூலம் தேவையான நிதியைப் பெற்றுக்கொண்டு கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்து வணிக ரீதியான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமான மாற்றுவழியாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, கென்வில் ஹோல்டிங்ஸ் (தனியார்) கம்பனியின் பங்குரிமைகளை விடுவிக்கும் செயன்முறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் அதற்காக தொடர்ந்தும் பரிவர்த்தனை ஆலோசகராக இந்தியாவின் டெலொயிட் டச் ஹமத்சு எல்எல்பீ கம்பனியின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காகவும், நிதி, திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. “கடலோர இராப் பொழுது: உறங்காத கொழும்பு” கருத்திட்டம்
இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய,“கடலோர இராப் பொழுது: உறங்காத கொழும்பு” (Marine Nights: Awakening Colombo) தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் காலிமுகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளி விவகார,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்;ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

5. விசேட பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவத்திற்கான பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றை நிறுவுதல்
பண்ணைகள் அல்லது விவசாய உற்பத்திகளின் விற்பனை, கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகத்திற்குத் தேவையான சந்தை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக 18 விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் தற்போது நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய 14 பொருளாதார நிலையங்கள் தற்போது இயங்கி வருகின்றன. குறித்த விசேட பொருளாதார நிலையங்களின் முகாமைத்துவமானது, 2006.01.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், அந்தந்த மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்ஃமாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான அரச நிறுவனங்கள் மற்றும் வர்த்தகக் கம்பனிகளிலிலிருந்து உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படும் உறுப்பினர்களுடன் கூடிய முகாமைத்துவப் பொறுப்பு மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்விசேட பொருளாதார நிலையங்களில் வர்த்தக நடவடிக்கைகள் வெற்றிகரமாகவும் நிலைபேறானதாகவும் மேற்கொள்வதற்காக மத்திய, சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்ற பொறுப்புக் கூறலுடன் கூடிய நிறுவனமொன்றைத் தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, விசேட பொருளாதார நிலையங்களை அபிவிருத்தி செய்தல், விரிவாக்கம் செய்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்காக பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றை நிறுவுவதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது.

6. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைக் குறைப்பதற்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய பல் துறைசார் பொறிமுறையை நிறுவுதல்
2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட புதிய அரசின் கொள்கைச் சட்டகத்தில் “பாதுகாப்பான சிறுவர் உலகம் – ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி” எனும் கொள்கை ரீதியான கடப்பாட்டின் பிரதான கோட்பாடாக அமைகின்ற பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்துவித பாதுகாப்புத் தொடர்பாக பல்வேறு விதமாக தலையிடுகின்ற பங்காளர்கள் சிலர் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, மற்றும் இலங்கை பொலிஸ் முக்கிய பணிகளை ஆற்றி வருகின்றது.

 

பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்துவித வன்முறைகள் தொடர்பாக தேசிய பாதுகாப்பு அதிகாரசபையால் 24 மணிநேர முறைப்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளை வழங்கியுள்ளது. ஆயினும், முறையான வகையில் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பங்களும் அதிகளவில் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் துரிதமாக தலையிட்டு செயற்படுவதற்கு இயலுமாகும் வகையில் கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
• மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஏனைய ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய தேசியமட்டக் குழுவொன்றை நியமித்தல்
• பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறுகின்ற உடலியல் ரீதியான தண்டனைகளை இல்லாதொழிப்பதற்கு இயலுமாகும் வகையில் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் வழக்குக் கோவையை துரிதமாக திருத்தம் செய்தல்
• பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் பற்றி அறிக்கையிடும் போது பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாவதைத் தடுப்பதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை உட்சேர்த்து, தற்போது வரைவாக்கம் செய்யப்படுகின்ற ஊடக ஒழுக்கநெறிக் கோவையை துரிதமாக வெளியிடல்
• பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தனித்துவ அடையாளங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற வகையில் வெகுசன ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக செய்தித் தொடர்பாடலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக குற்றத்தால் பலியானவர்கள் மற்றும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உடனடி தலையீடுகளைப் பெற்றுக் கொள்ளல்

7. மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டம் கட்டம் 2 – கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பல் கட்ட நிதி வசதிகளின் கீழ் 02 கட்டங்களுடன் கூடிய மகாவலி நீர்ப்பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்ட கட்டம் – 01 இனை நடைமுறைப்படுத்துவதற்காக 2015.04.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், வேலை ஒப்பந்தத்தின் பக்கேஜ் இன் மதிப்பிடப்பட்ட அளவுகள் மற்றும் செலவுகளை விஞ்சிச் செல்லல், நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் குறித்த வேலைத்திட்டத்தை திட்டமிட்டவாறு நிறைவு செய்வதற்கு இயலாமல் போயுள்ளது. அதனால், இவ்வேலைத்திட்டத்தின் எஞ்சிய பகுதி முன்னுரிமை அடிப்படையில் பல கட்டங்களின் கீழ் மீள்கட்டமைத்து நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, வடமத்திய மாகாண மஹஎல நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் வடமத்திய மாகாண மஹஎலவுடன் இணைப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களுக்கு மேம்படுத்தப்பட்ட விநியோக நீர்க் கட்டமைப்புக்களுடன் கூடிய வணிக விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நிறுவுதல் போன்ற செயற்பாடுகள் உள்ளிட்ட மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டம் கட்டம் 2 இனை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

குறித்த கட்டத்தின் கீழ், குருளுவாவி, மானங்கட்டிய, ஏறுவாவி, மஹகனதராவ, நாச்சதூவ, நுவரவாவி மற்றும் திசாவாவி போன்ற பெருநீர்ப்பாசனக் கட்டமைப்புக்களில் பயிர்ச்செய்கை வினைத்திறனை அதிகரித்தல், வடமத்திய மாகாண குடிநீர்த் தேவைக்கான 40 மில்லியன் கனமீற்றர் நீரை ஆண்டுதோறும் பெற்றுக் கொள்ளல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார விருத்தி போன்ற நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டம் கட்டம் 2 கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இணை நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்காக விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. அரச உரக்கம்பனி லிமிட்டட் மூலம் 15,000 மெற்றிக்தொன் யூரியா உரப் பெறுகை
அரச உரக்கம்பனி லிமிட்டட் மூலம் தனியார் துறையின் கம்பனிகள் மற்றும் போட்டித்தன்மையுடன் 2023/24 பெரும்போகம் தொடக்கம் உர இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக 2023.07.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எஞ்சிய போகங்களுக்கும் திறந்த சந்தையில் நேரடி மற்றும் கலப்பு உரமாக விற்பனை செய்வதற்காக போட்டி விலைமனுக்கோரல் பொறிமுறையைக் கடைப்பிடித்து, 15,000 மெற்றிக்தொன் யூரியாவை அரச உரக்கம்பனி லிமிட்டட் மூலம் இறக்குமதி செய்வதற்காக விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. பால் உற்பத்தியாளர்களை முறையாக ஒன்றுசேர்த்து வலுவூட்டுவதன் மூலம் அவர்களுடைய உற்பத்திகளின் உற்பத்தித்திற்னை அதிகரித்தல் மற்றும் சேர்பெறுமதியை மேம்படுத்தல் கருத்திட்டம்
உலக வங்கியின் நிதியிடல் மூலம் உள்ளடக்கப்பட்ட ஒருங்கிணைந்த அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்தி, விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சால் “பால் பண்ணைகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து சேர்பெறுமதியை மேம்படுத்தல்” கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக, தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது. பால் உற்பத்திக்காக ஆற்றல்வளங்கள் காணப்படுகின்ற அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், மாத்தளை, கண்டி, நுவரெலியா, கம்பஹா,அம்பாறை, பதுளை, காலி மற்றும் அம்பாந்தோட்டை போன்ற 12 மாவட்டங்களில் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் பால் பண்ணைகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து சேர்பெறுமதியை மேம்படுத்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி