எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோயாளர்களின் நலன் கருதி பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் புதிய மருத்துவ சிகிச்சை அலகை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல் தொற்று நோய் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.
நோயாளர்கள், விடுதிகளின் கட்டில்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் காணப்படுவதால் தரையில் இருந்து சிகிச்சை பெரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டமையால் டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல் தாக்கத்துடன் தற்போது புதிதாக எலிக்காய்ச்சல் என மூன்று வகை நோய்களின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அந்தவகையில் எலிக்காய்ச்சலின் தாக்கத்தால் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இதன்காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ். சிறீபவானந்தராஜா, வைத்தியசாலையின் நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததுடன் விடுதிகளில் தங்கி இருந்த நோயாளர்களையும் பார்வையிட்டார்.
குறிப்பாக மருத்துவ சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையான நோயாளர்கள் அங்கு மருத்துவ சிகிச்சை விடுதிகளில் கட்டில்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாகக் காணப்படுவதையும், அவர்கள் தரையில் இருந்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதனையும் காணக்கூடியதாக இருந்தது.