இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நாளை காலியில் ஆரம்பமாகும் டெஸ்ட் தொடருடன் 2025–2027 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவம் ஆரம்பமாகவுள்ளது. இதில் 27 தொடர்களில் மொத்தம் 71 போட்டிகள் நடைபெறவுள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
லண்டன், லோட்ஸ் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (14) நிறைவடைந்த தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான இறுதிப் போட்டியுடன் 2023–2025 உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவம் நிறைவடைந்தது. இதில் அவுஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட்டுகளால் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
இந்நிலையில் ஆரம்பமாகவுள்ள புதிய உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் இலங்கை அணி மொத்தமாக 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதில் நடைபெறவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடர் உட்பட இலங்கை அணி சொந்த மண்ணில் மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதில் இந்தியா மற்றும் நடப்புச் சம்பியன் தென்னாபிரிக்காவுக்கு எதிரான தலா இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர்களும் அடங்கும்.
அதேபோன்று இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 2 போட்டிகளில் ஆடும். இந்த டெஸ்ட் பருவத்தில் இலங்கை அணிக்கு அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி கூட இடம்பெறவில்லை.
2025–2027 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் அதிகபட்சமாக அவுஸ்திரேலிய அணி மொத்தம் 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரும் அடங்கும்.
இலங்கையுடன் பங்களாதேஷ் அணி இந்தப் பருவத்தில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. பங்களாதேஷ் அணிக்கும் மொத்தம் 12 டெஸ்ட் போட்டிகளே கிடைத்துள்ளன. இங்கிலாந்து 21 போட்டிகளிலும், இந்தியா 18 போட்டிகளிலும் ஆடவிருப்பதோடு நடப்புச் சம்பியன் தென்னாபிரிக்காவுடன், மேற்கிந்திய தீவுகள் மொத்தமாக தலா 14 போட்டிகளில் ஆடும்.
இந்தப் பருவத்தில் நியூசிலாந்து அணிக்கு 16 போட்டிகள் கிடைத்திருப்பதோடு பாகிஸ்தான் அணி 13 போட்டிகளில் ஆடும்.