கொட்டும் மழைக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டம் !

user 12-Mar-2025 இலங்கை 101 Views

மூதூர் வலயக்கல்வி அலுவலக பிரிவிலுள்ள பாட்டாளிபுரம் பாமகள் வித்தியால மாணவர்களின் பெற்றோர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று  (11) காலை பாடசாலைக்கு முன்னால் இரண்டு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்தில் 352 மாணவர்கள் கல்வி கற்பதோடு இது க.பொ.த. சாதாரண தரம் வரையான மாணவர்கள் கற்கும் பாடசாலையாகும்.

இந்தப்  பாடசாலை பின் தங்கிய கஷ்டப் பிரதேச பாடசாலையாகும்.இப் பாடசாலையில் கணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம்,சமயம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதோடு இது தொடர்பாக கிராம மக்கள் அதிகாரிகளிடம் பல்வேறு தடவைகள் கோரிக்கை முன்வைத்த போதிலும் இதுவரை அவை நிறைவேற்றப்படாமையினால் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் போராட்ட  இடத்திற்கு மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தேவதாஸ் ஜெயந்தன் வருகை தந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது மூதூர் வலயத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்ததோடு இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஒரு குழுவொன்றை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு வருகை தருமாறு தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து களைந்து சென்றனர்.

அத்தோடு பிரதிக் கல்வி பணிப்பாளரிடம் போராட்டக்காரர்களினால் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post

பிரபலமான செய்தி