ஐ.பி.எல். தொடரின் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி இடத்தில் உள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தனது இறுதி லீக் போட்டியில் 83 ஓட்டங்களால் இலகுவாக வென்றது.
அஹமதாபாத்தில் நேற்று முன்தினம் (25) நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப வீரர் டெவோன் கொன்வோய் 35 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றதோடு டெவால்ட் பிரேவிஸ் 23 பந்துகளில் 57 ஓட்டங்களை குவித்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கே சுருண்டது.
இதேவேளை நேற்று முன்தினம் நடந்த மற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சன்ரைசஸ் ஹைதராபாத் 110 ஓட்டங்களால் வீழ்த்தியது. இதில் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது அதிவேக சதத்தை பெற்ற ஹெயின்ரிச் கிளாசன் 39 பந்துகளில் ஆட்டமிழக்காது 105 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் ஹைதராபாத் அணி 20 ஓவர்களுக்கும் 3 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களை பெற்றது.
பதிலெடுத்தாடிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 168 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன்படி நடப்புச் சம்பியன் கொல்கத்தா அணி தோல்வியுடன் 8ஆவது இடத்தைப் பெற்று இம்முறை ஐ.பி.எல். தொடரை நிறைவு செய்துள்ளது.
இதன்படி ஐ.பி.எல். லீக் போட்டிகள் இன்று நடைபெறும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான போட்டியுடன் நிறைவடையவுள்ளது. தொடரின் பிளே ஓப் சுற்று எதிர்வரும் வியாழக்கிழமை (29) ஆரம்பமாகும்.