ரயில் சேவைகள் ரத்தானமைக்கு சாரதிகளின் சதி முயற்சிகளே காரணம்

user 28-May-2025 இலங்கை 71 Views

ரயில் சேவைகள் ரத்தானமைக்கு தொழிற்சங்க நடவடிக்கை காரணமல்ல என்றும் சாரதிகளில் சிறு குழுவினரின் மோசமான சதி முயற்சிகளே காரணம் என்றும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேகர தெரிவித்துள்ளார்.அரசாங்கம் என்ற வகையில் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது என தெரிவித்துள்ள அவர், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் ரயில் சேவைகளை நிறுத்தியாவது அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்படி ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணமானது அரசியல் கைக்கூலிகளாக செயற்படும் சில சாரதிகள் மேற்கொண்ட சதி முயற்சியின் பிரதிபலனே, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ரயில் சேவைகள் முறையாக இடம் பெறாமை தொடர்பில், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,திங்கள் காலை மற்றும் வெள்ளிக்கிழமை மாலை ஆகிய நேரங்கள் மிக நெருக்கடியானவை. அந்த சந்தர்ப்பங்களில் போக்குவரத்துக்காக ரயிலை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமானதாகும். அந்த வகையில் திங்கட்கிழமை காலை 15 ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. சாரதிகள் கடமைக்கு வருகை தராமையே இதற்கு முக்கிய காரணம்.பிரதான ரயில் மார்க்கங்களில் ஏழு ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.

 

கடல் வழி மார்க்க ரயில்கள் 06 ரத்துச் செய்யப்பட்டிருந்தன. சிலாபத்துக்கான இரண்டு ரயில் சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.

இவற்றுக்கு காரணம் தொழிற்சங்க நடவடிக்கைகள் அல்ல. மாறாக ரயில் சாரதிகள் கடமைக்கு திரும்பாமையே. சாரதிகள் தரப்புக் குழு ஒன்றின் மோசமான செயற்பாடு இது.இதன் பின்புலத்தில் அரசியல் தொடர்புகள் உள்ளன.

இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களை நாம் தெரிந்து வைத்துள்ளோம். தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மேற்படி ரயில் சேவைகள் ரத்து தொடர்பில் நாம் அவர்களிடம் விளக்கம் கோரவுள்ளோம். ஒரே தடவையில் இந்தளவு எண்ணிக்கையான ரயில் சாரதிகள் சுகவீனமடைய முடியாது. அந்த வகையில் ரயில்வே திணைக்களம் என்ற வகையில் அவர்களிடம் விளக்கம் கோரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி