இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம் பாதயாத்திரை நாளை மறுதினம் (01) அதிகாலை செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிறது.
வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொணராகல 7 மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகநீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.
அதன் முன்னோடியாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பெரிய வளவு கந்தசாமி ஆலயத்திலிருந்து செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தை நோக்கிய ஆரம்ப முன்னோடி பாதயாத்திரை ஆரம்பமானது.
ஜெயா வேல்சாமி தலமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நேராக மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலை சென்றடைந்து நேற்று செல்வச்சந்நிதி ஆலயத்தை வந்தடைந்தனர்.
செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து முறைப்படி கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை நாளை மறுதினம் ஜெயாவேல் சாமி தலைமையில் ஆரம்பமாகிறது.
ஆரம்பத்தில் சுமார் 40 அடியார்கள் பங்குபற்றுகின்றனர். இடைநடுவில் கலந்து கொள்ளும் அடியார்கள் கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து விபரங்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு தலைவர் ஜெயாவேல்சாமி கேட்டுக் கொள்கின்றார்.