காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றுள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று (26) நடத்திய தாக்குதலில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டது உட்பட இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்களில் மேலும் 55 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.
காசா நகரில் உள்ள இந்த பாடசாலையில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்று சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ‘முக்கிய பயங்கரவாதிகள்’ தங்கி இருந்த இடத்தின் மீதே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
காசாவை முழுமையாக கைப்பற்றுவதாக குறிப்பிட்டு அங்கு தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு காரணமாகியுள்ளது. மறுபுறம் சுமார் மூன்று மாதமாக முடக்கப்பட்டிருக்கும் காசாவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகள் செல்ல இஸ்ரேல் அனுமதித்தபோதும் அங்கு தொடர்ந்து உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஸ்பெயினில் இடம்பெற்ற உலகத் தலைவர்களின் கூட்டத்தில் ‘மனிதாபிமானம் அற்ற’ மற்றும் ‘அர்த்தமற்ற’ போரை முடிவுக்குக் கொண்டுவரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதோடு சொற்ப உதவி பட்டினி மற்றும் சுகாதார நெருக்கடியை தணிப்பதற்கு போதுமாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காசா நகரில் உள்ள பஹ்மி அல் ஜர்ஜாவி பாடசாலை மீது நேற்று அதிகாலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சிவில் பாதுகாப்பு நிறுவன பேச்சாளர் மஹ்மூத் பசல் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலை அடுத்து தீ பரவி இருப்பதோடு பலரும் உடல் கருகி உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாடசாலையின் முற்றவெளியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களிலேயே தீ பரவியுள்ளது.
எனினும் முன்னர் பஹ்மி அல் ஜர்ஜாவி பாடசாலை அமைந்துள்ள இடத்தில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இயங்கி வந்த முக்கிய பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த 2023 ஒக்டோபரில் காசா போர் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேல் இராணுவம் பாடசாலைகள், வைத்தியசாலைகள் உட்பட சிவில் உட்கட்டமைப்புகள் மீது அடிக்கடி நடத்தும் தாக்குதல்களில் பலரும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு காசாவின் ஜபலியா நகரில் உள்ள அப்த் ரப்பு குடும்ப வீட்டின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய மற்றொரு வான் தாக்குதலில் குறைந்து 19 பேர் கொல்லப்பட்டதாக பசல் குறிப்பிட்டுள்ளார்.
காசா தாக்குதலை விரிவுபடுத்தி இருக்கும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை வீழ்த்தும் திட்டத்துடன் ஆயிரக்கணக்கான ரிசர்வ் படைகளை பயன்படுத்தியுள்ளது.
பயங்கரவாதிகள், ஆயுதக் கிடங்குகள், ஸ்னைப்பர் மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை நிலைகள், சுரங்கப் அமைப்புகள் உட்பட காசா முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 200க்கும் அதிகமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று கூறியது.
அதேபோன்று இஸ்ரேலை நோக்கி நேற்று காசாவில் இருந்து மூன்று ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. 1967 அரபு – இஸ்ரேல் போரின்போது ஜெரூசலம் நகரை இஸ்ரேல் கைப்பற்றிய தினத்தை இஸ்ரேல் நேற்று கொண்டாடிய நிலையிலேயே இந்த ரொக்கெட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
‘இரு ரொக்கெட் குண்டுகள் காசாவுக்குள் விழுந்ததோடு மற்றது இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு முன்னர் இடைமறிக்கப்பட்டது’ என்று அது கூறியது.
இஸ்ரேலின் இந்தப் போருக்கு உறுதியாக ஆதரவை அளித்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த நிலைமையை முடியுமான விரைவில் நிறுத்த முடியுமா என்று அவதானித்து வருவதாக கடந்த ஞாயிறன்று குறிப்பிட்டுள்ளார்.
இதே தினத்தில் ஸ்பெயினில் ஒன்று கூடிய அரபு மற்றும் ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்ததோடு, இஸ்ரேல் மீது ஆயுதத் தடை விதிப்பதற்கு ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவேல் அல்பார்ஸ் அழைப்பு விடுத்தார்.
எந்த நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாடும் இன்றி பாரிய அளவில் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படுவதற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.