தென் கொரியாவின் குமி நகரில் நேற்று (27) ஆரம்பமான தெற்காசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் பலரும் தமது ஆரம்ப சுற்று போட்டிகளில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இதில் உயரம் பாய்தல் போட்டியின் பி குழுவில் ஆரம்ப சுற்றுப் போட்டிக்காக நேற்று களமிறங்கிய லெசது அர்த்தவிது 2.10 மீற்றர் தூரம் பாய்ந்து இறுதிப் போட்டிக்கு இலகுவாக தகுதி பெற்றார். பதக்க எதிர்பார்ப்புடன் ஆண்களுக்கான உயரம் பாய்தல் இறுதிப் போட்டியில் அவர் நாளை (29) களமிறங்கவுள்ளார்.
இலங்கையின் பதக்க எதிர்பார்ப்புகளில் முன்னணியில் இருக்கும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ஆரம்ப சுற்று போட்டிகள் நேற்றுக் காலை இடம்பெற்றன. இதன் முதல் ஆரம்ப சுற்று போட்டியில் பங்கேற்ற அருண தர்ஷன 48.10 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து ஆறாவது இடத்தையே பிடித்தார். இது அவரது தனிப்பட்ட காலத்துடன் ஒப்பிடுகையில் மோசமாக இருந்தது. இதனால் அவரால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல்போனது.
எவ்வாறாயினும் இந்தப் போட்டிச் சுற்றில் இரண்டாவது ஆரம்ப சுற்று போட்டியில் பங்கேற்ற காலிங்க குமாரகே 46.59 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
பின்னர் அவர் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கலந்து கொண்டார். அந்தப் போட்டியில் அவர் 45.74 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து இரண்டாவது இடத்திற்கு வந்தார். இதன்போது அவர் அரையிறுதிப் போட்டிகளில் இரண்டாவது சிறந்த காலத்தையும் பதிவு செய்தார். இதன்மூலம் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு காலிங்க குமாரகே முன்னேறினார்.
ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் பங்கேற்ற நிஷேந்திரா பெர்னாண்டோ 57.81 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து நான்காவது இடத்தைப் பிடித்தார். இதனால் அவரால் அந்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல்போனது. எனினும் இரண்டாவது ஆரம்பச் சுற்றுப் போட்டியில் பங்கேற்ற நதீஷா ராமநாயக்க 57.77 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பெண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றதோடு, அந்தப் போட்டியில் பங்கேற்ற நதீகா லேகம்கே ஆறாவது இடத்தை பெற்று பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.
அவர் இந்தப் போட்டியில் சிறந்த திறமையாக 55.53 மீற்றர் தூரத்தை வீசி இருந்தார். எனினும் 63.29 மீற்றர் தூரத்தை வீசிய சீனாவின் சூ லங்டன் இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
இதனிடையே ஆசியாவின் அதிவேக வீரரை தேர்வு செய்யும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்று போட்டிகள் நேற்று இடம்பெற்றன. அதற்கு இலங்கையின் சமோத் யோதசிங்க பங்கேற்றார். இவர் இரண்டாவது ஆரம்ப சுற்றில் கலந்துகொண்டு முதல் இடத்தைப் பிடித்தார். அவர் போட்டித் தூரத்தை 10.40 விநாடிகளில் நிறைவு செய்தார். அதன்படி சமோத் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் ஆரம்ப சுற்று போட்டி நடைபெறவுள்ளதோடு இதில் இலங்கை அணியும் பங்கேற்கவுள்ளது. இதில் இலங்கை பதக்க எதிர்பார்ப்புடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று இலங்கை பங்கேற்கும் 400 கலப்பு அஞ்சலோட்டப் போட்டியும் இன்று நடைபெறவுள்ளது.