ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பஹல்காமில் செவ்வாய்க்கிழமை (22) தீவிரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும், உளவுத்துறைப் பணியகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்காக இராணுவ ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
ஏனெனில் அந்தப் பகுதிக்கு கால்நடையாகவோ அல்லது குதிரையில் சென்றோ மட்டுமே செல்ல முடியும்.
தாக்குதலின் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை ஸ்ரீநகருக்கு விஜயம் மேற்கொண்டார்.
அங்கு ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் நளின் பிரபாத் அவருக்கு விளக்கம் அளித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி – தனது இரண்டு நாள் சவுதி அரேபியா பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு திரும்பினார்.
அவருடன் பேசி தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டார்.
பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில், ஒரு மலையின் உச்சியில் உள்ள புல்வெளியில் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டன.
தீவிரவாதிகள் காடுகளிலிருந்து வெளியேறி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியதாக சாட்சியங்கள் தெரிவித்தன.
துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் வெளியான காட்சிகளில் பலர் அசையாமல் தரையில் கிடப்பதையும், பல பெண்கள் உதவிக்காக மன்றாடுவதையும் வெளிக்காட்டியுள்ளது.
பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்து கொண்டிருந்த நேரத்திலும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த நேரத்திலும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இன்று அதிகாலை டெல்லி திரும்பிய பிரதமர், சவுதி அரேபியா நடத்திய அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை.
அவர் முதலில் புதன்கிழமை (23) இரவு இந்தியாவுக்குப் புறப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் தாக்குதலுக்குப் பின்னர் தனது பயணத்தை முடித்துக்கொண்டார்.
இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த அவர், “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் உறுதி அசைக்க முடியாதது, அது இன்னும் வலுவடையும்” என்றார்.